Tuesday, September 9, 2003

ராமேஸ்வரம் மீனவர்கள் நிலை: வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்கள் பிடித்துச் செல்லப்படுவதைத் தடுக்கஉரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரமர் வாஜ்பாய்க்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார். 
 
 இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச விதிமுறைகளை மீறி அடிக்கடி இலங்கைஅரசு தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்று விடுகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மொத்தம் 34 மீனவர்கள் இலங்கை அரசின் பிடியில் உள்ளனர். இவர்களில் ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 15 பேர், நாகையைச் சேர்ந்தவர்கள் 14 பேர், புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் 5 பேர். இவர்களின் பரிதாப நிலை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
 
 இவர்கள்இலங்கை சிறைகளில், சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக 17 முதல் 177 நாட்களாக வாடிவருகின்றனர். எப்போது இவர்கள் இந்தியா திரும்புவார்கள் என்ற தகவல் கூட கிடைக்காததால், இவர்களதுகுடும்பத்தினர் அச்சத்திலும், பெரும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர். 
 
தமிழக மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில்தான் மீன்பிடித்து வருகிறார்கள். இது தங்களுக்குத் தெரியும். ஆனால் அவ்வாறு மீன் பிடிக்கச் சென்றால்,இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் தமிழக மீனவர்களைத் தடுக்கின்றனர், தாக்குகின்றனர்,கைது செய்து சென்று விடுகின்றனர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அடிக்கடி நடக்கிற விஷயமாக மாறிவிட்டது. எனவே தூதகர அளவில் இலங்கை அரசிடம் இப்பிரச்சினையைக் கொன்டு சென்று 34மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Friday, July 25, 2003

மீனவர்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்க கச்சத்தீவை குத்தகைக்கு பெற்றுத்தர வேண்டும் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தவிர்க்க கச்சத்தீவை நிரந்தர குத்தகைக்கு பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மீனவர்கள் மீது தாக்குதல்

கச்சத்தீவு அமைந்து இருக்கும் பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீது கண் மூடித்தனமான தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தமிழக அரசு மறுபடியும் மறுபடியுமாக இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறது.

குறிப்பாக கச்சத்தீவு பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நல்ல மீன்வளம் தான் எங்கள் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் ஏற்படும் சண்டையின் காரணமாக அமைந்துள்ளது.

தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் இலங்கை மீனவர்களும் இந்த சண்டையில் இறங்கி நிலைமையை மிகவும் மோசமாக்கி விட்டார்கள். நமது மீனவர்களின் இந்த துன்பத்துக்கும் துயரத்துக்கும் அடிப்படைக் காரணம் இந்தியா-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவை நன்கொடையாக அளித்ததுதான்.

ஒப்பந்தம்?

பாராளுமன்றத்தில் 1974-ம் ஆண்டு ஜூலை 24-ந் தேதி நீங்கள் (பிரதமர் வாஜ்பாய்) பேசும்போது எவ்வாறு இந்த தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஜமீனில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது என்பதை விளக்கிப் பேசி எவ்வாறு இந்திய அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு பதிலாக இந்தியா தன் உரிமையை "சரண்டர் செய்து விட்டது" என்பது உங்களுக்கு நினைவு இருக்கும்.

அண்டையை நாட்டுடன் நல்லெண்ண உறவு என்ற பெயரில் மத்திய அரசு எடுத்த இந்த துரதிருஷ்ட முடிவால் கடலோர பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான எங்கள் மீனவர்களின் வாழ்க்கைக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர்கள் படுகொலை

அந்த கடல்சார் ஒப்பந்தத்துக்கு பிறகு எங்களின் 100 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 326 மீனவர்கள் கடுமையாக காயம் அடைந்துள்ளனர். 35 மீன் பிடி படகுகள் அழிக்கப்பட்டன. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்கள் கடலிலே கொட்டப்பட்டன.

சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதும் அடுத்த நாட்டு கடல் பகுதியில் மீன் பிடிப்பதும் சிவிலியன் பொருளாதார குற்றம் தான் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

சர்வதேச கடல் எல்லையை தாண்டும் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதும் கொல்வதும் அனைத்து இயற்கை விதிகளை மீறுவதாகும்.

இருநாடுகளும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இரு நாட்டு எல்லைகளைத் தாண்டும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இருநாட்டு அதிகாரிகளும் அவர்களுக்கு எந்தவித துன்பமும் தரக்கூடாது என்று கூறப்பட்டுள் ளதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். கைது செய்யப்படும் மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரின் முயற்சிகளைப் பாராட்டும் அதே சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகளை தீயை அணைக்க எடுக்கும் நடவடிக்கைகளாகத் தான் கருதவேண்டும்.

ஆலோசனை

ஒரு நிரந்தர தீர்வை அடைய தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை அரசிடம் கடுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இலங்கையோடு நல்ல உறவுகளைப் பராமரிப்பதின் தேவையை மனதில் கொண்டு, அதே நோக்கத்தில் நம் மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் 2 ஆலோசனைகளை வழங்கலாம் என்று கருதுகிறேன்.

நிரந்தர குத்தகை

கச்சத்தீவையும் அதன் அருகே உள்ள கடல் பகுதிகளையும் மீன் பிடிப்பதற்காகவும், வலைகளைக் காயப் போடுவதற்காகவும் நிரந்தரமான குத்தகைக்குப் பெறுவதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஆகும்.

கச்சத்தீவுக்கு இலங்கையில் இருந்து பக்தர்கள் வரும் உரிமையையும் நிலை நிறுத்தலாம். அதே நேரத்தில் இந்த நிரந்தர குத்தகை தமிழக மீனவர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக அவர்கள் மேற்கொள்ளும் தொழிலை செய்யவும் இது வழி வகுக்கும்.

முன் உதாரணம்

டின்பிகா தொடர்பாக 1974-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் இதற்கு உதாரணம்.
இந்த ஒப்பந்தத்தில் முழு சுதந்திரமும், இந்தியாவிடம் இருக்கும். நிரந்தர குத்தகையின் அடிப்படையில் வங்காள தேசத்தினர் இப்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரச்சினைக்கு தீர்வாக அமையும்

இந்த மாடலை ஏற்றுக் கொண்டால் அது ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினையை தீர்த்து விடும். நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் தங்கள் பிழைப்புக்காக இலங்கை கடற் பகுதிக்குள் நுழைகிறார்கள்.

கடித பரிவர்த்தனை

இலங்கைக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இடையே உள்ள கடிதங்கள் பரிவர்த்தனையின் படி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை மீன்பிடி கப்பல்களை `வாட்கே" கரைப்பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு மீன் பிடிக்க இந்தியா அனுமதித்து உள்ளது என்பதை எடுத்துச் சொல்வது மிகவும் தேவையான ஒன்று.

இதே முறையில் உரிய லைசென்ஸ் பெற்றுள்ள தமிழக மீனவர்களை இலங்கைப் பகுதியில் 5 கடல் மைல்கள் தூரம் வரை மீன்பிடிக்க இலங்கை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

கொள்கை அளவில்...

இந்த ஆலோசனையை கொள்கை அளவில் இலங்கை ஏற்றுக் கொண்டால் மீன் பிடிப்பதை ஒழுங்கு படுத்துவதோடு மட்டுமல்லாமல் சட்ட விரோதமான காரியங்களுக்கும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க இரு நாடுகளுக்கும் இடையே விரிவான நடைமுறைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

நம்பிக்கை

இந்த இரு ஆலோசனைகளும் உங்களது தீவிர பரிசீலனையைப் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.